கவிதைகள்
Trending

கவிதைகள்- இரா‌.பூபாலன்

மலையுச்சியில் அமர்ந்தபடி
தனியனாய்ப் பேசிக்கொண்டிருந்தேன்.
யாருடன் பேசுகிறாய் என்றார்கள்
என்னுடன் தான் என்றது மலை
பாவம் அவர்களுக்கு அது கேட்கவில்லை
பொருட்படுத்தாது சிரித்தபடிக்
கிளம்பிவிட்டார்கள்
விநோதப் பார்வைகளை
தங்களோடே எடுத்துக் கொண்டு,
பிறகொரு முறை
நீங்கள் வந்தால் இந்தப் பள்ளத்தாக்கின்
பச்சை பாதாளத்துக்குக் கொஞ்சம்
செவி கொடுத்துப் பாருங்கள்
நானும் மலையும்
பேசிக் கொண்டிருப்பது கேட்கலாம்

*********

என்ன செய்கிறாய் என்றொரு கேள்வி
எப்போதும் பின் தொடர்ந்தபடியிருக்கிறது

கண்விழித்த கணத்தில்
எதிரில் விழும் அந்தக் கேள்விக்கு
கண்விழித்தேன் என
பதிலளிக்க வேண்டியிருக்கும்

குளியலறை நீங்கியதும்
என்ன செய்கிறாய் என்று வந்து நிற்கும்

அலுவலகப் பணிகளுக்கிடையில்
அரைமணிக்கொரு முறை
எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அதை

தேநீர் இடைவெளைகளில்
உணவு நேரங்களில்
நிற்கையில் நடக்கையில்
வாகனத்தில் விரைகையில்

என்ன செய்கிறாய்
என்ன செய்கிறாய்

அதன் முன் ஒரு
அகதியைப் போல
கை பிசைந்து நிற்பேன்
அவ்வப்போது
சினமேறி
அதை தட்டாமாலை
சுற்றியெரிவது போல
எரிந்துவிடத் துடிப்பேன்
ஆனாலும்
ஒரு நாள்
ஒரு பொழுது
ஒரு முறையேனும்
என்ன செய்கிறாய்
எதிரில் வராமல் போனால்
ஒரு
அநாதையைப் போல
பரிதவித்து நிற்கிறேன்

*********

நெடுங்காலம் தொடர்பு எல்லைகளுக்கு
அப்பாலேயே இருந்தும்
அலைபேசியில் அழித்திடவே
முடியாத ஓர் எண் எப்போதும் இருக்கிறது

நெடுங்காலம் ஒரு பதிவுமற்று
வெற்றுச் சுவராய் இருந்தும்
நட்பு நீக்கம் செய்திடாது
இருக்கவே செய்கிறது
ஒரு முகநூல் நட்பு

ஒரு போதும் சென்றிடாத போதும்
ஒரு கடிதமும் எழுதிடாத போதும்
நினைவில் எப்போதும் இருக்கிறது
ஒரு அஞ்சல் முகவரி

எப்போதும் தொடர்பு கொள்ளவியலா
தொடர்பு கொள்ள விரும்பா
ஓர் அன்பு
எங்கோ தொலைவில்
இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது

என்னைப் போலவே
அங்கும் இருக்கும்
தொடர்பு கொள்ளவியலா
ஒரு அலைபேசி எண்
ஒரு முகவரி
மற்றும்

சதா புலம்பல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்
ஒரு முகநூல் கணக்கை
ரகசியமாய் வந்து படித்துச் செல்லும்
தவிப்பின் பாதை

*********

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

4 Comments

  1. நிகழ் கால எதார்த்தங்கள்

    அருமையான கவிதைகள் கவிஞர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button